Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 ஆடுகள் பலி : நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு

kangeyam , Goatகாங்கயம் : காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் 34 ஆடுகள் உயிரிழந்தன. இறந்த ஆடுகளுடன் விவசாயிகள் நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொட்டியபட்டி, அமராங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (62) விவசாயி. இவருக்கு சொந்தமான அமராங்காட்டு தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6 மணி‌ அளவில் பட்டியில் 40 ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று காலை 6 மணி‌க்கு பட்டிக்கு சென்று பார்த்தபோது, இரவு நேரத்தில் வெறிநாய்கள், பட்டியில் இருந்த செம்மறி ஆடுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகளை துரத்தி துரத்தி கடித்து குதறியுள்ளது. இதில், 15 பெரிய ஆடுகளும், 15 குட்டிகளும் இறந்துவிட்டன. இது குறித்து காங்கயம் நகராட்சி வருவாய் ஆய்வாளர், கால்நடை மருத்துவர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பரிசோதித்தனர். உயிருக்கு போராடிய இரண்டு ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும்.

மேலும், காங்கயம் அருகே பொத்திபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மூர்த்தி (43) என்பவரது பட்டியில் நேற்று முன்தினம் இரவு ஐந்து ஆடுகளை தெருநாய்கள் கடித்ததில் நான்கு ஆடுகள் பலியானது. இதையடுத்து பிஏபி காங்கயம் வெள்ளகோவில் கிளை நீர்பாதுகாப்பு சங்க விவசாயிகள் 200க்கும் மேற்பட்ட காங்கயம் பஸ்நிலையம் எதிரே இறந்த ஆடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், உணவக இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தெருநாய்களால் கடிக்கும் கால்நடைகளுக்கு வழக்குப்பதிவு செய்து இந்த அரசானது தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காங்கயம் தாசில்தார் மயில்சாமி, காங்கயம் நகராட்சி கமிஷனர் கனிராஜ், காங்கயம் டிஎஸ்பி மாயவன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்ததை நடத்தினர். இதில், காங்கயம் நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர். காங்கயம் தாலுகா பகுதியில் தினமும், ஆடுகளை தெருநாய்கள் கடித்து பலியாவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

34 goats killed by rabid dogs in kangeyamFarmers protest for relief