Saturday, December 2, 2023
Home » மலைவாழ் பெண்களின் ராணி!

மலைவாழ் பெண்களின் ராணி!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

கல்வி, வாழ்க்கையில் அனைவருக்குமானது. கல்வி கற்றல் என்பது இப்போதெல்லாம் ஒரு ஓட்டப்பந்தயம் போலாகிவிட்டது. மதிப்பெண்கள் அதிகமாக பெறுபவர்கள் மட்டுமே சிறந்தவர்கள் என்று ஒரு காலக்கட்டம் உருவாகியுள்ள நிலையில், பள்ளியிலோ, கல்லூரியிலோ சாதித்தே ஆக வேண்டும் என்ற மன அழுத்தம் பிள்ளைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. ‘‘எந்தவித அழுத்தமும் இல்லாமல் எளிமையாகவும் இயல்பாகவும் கல்வியை குழந்தைகளுக்கு போதிக்க முடியும்’’ என்கிறார் ராஷ்மி பாரதி. இவர் தன் மகளுக்காக ஆரம்பித்த பள்ளியில் இப்போது பல மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

உத்தரகாண்ட் மாநிலம் குமாவுன் பகுதியை சேர்ந்தவர் ராஷ்மி பாரதி. இவர் தன்னுடைய மகள் ஒரு சிறந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக பல பள்ளியில் உள்ள பாடத்திட்டங்கள் குறித்து விசாரித்துள்ளார். எல்லா பள்ளிகளும் மனப்பாடம் செய்யும் முறையை மட்டுமே பின்பற்றி வருவதால் அங்கு தன் மகளை சேர்க்க அவருக்கு விருப்பமில்லை. அதனால் தன் மகளுக்காகவே ஒரு பள்ளி ஒன்றை திறந்திருக்கிறார் ராஷ்மி. இவரின் பள்ளியில் குழந்தைகளுக்கு எந்தவிதமான மன அழுத்தமும் கிடையாது. அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர்கள் வழியிலேயே சென்று கல்வியை கற்றுத்தரும் முறையில்தான் தன் பள்ளியினை ஆரம்பித்தார்.

‘‘நான் என்னுடைய பள்ளியினை 2011ல் துவங்கினேன். இங்கு 5ம் வகுப்பு வரை மட்டும்தான் பாடத்திட்டங்கள் உள்ளன. அதன் பிறகு அவர்கள் வேறு நார்மல் பள்ளியில் சேர்ந்து படிக்கலாம். மேலும் எங்களின் பள்ளியில் குழந்தைகளுக்கு யூனிஃபார்ம் என்று கிடையாது. இங்கு பிள்ளைகள் இயற்கையோடு ஒத்து, மிக எளிமையான நடைமுறையில் தான் கல்வியை கற்கிறார்கள். என் பள்ளியில் என் நண்பர்களின் குழந்தைகள் மட்டுமில்லாமல், எங்க ஊரில் இருக்கும் நெசவாளர்களின் பிள்ளைகளும் படிக்கிறார்கள்.

இங்குள்ள கல்விமுறை குழந்தையின் உணர்ச்சிகளோடு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. அதாவது குழந்தைகளை ஒரே அறையில் அமர வைத்து அவர்கள் முன் பல பொருட்களை வைப்போம். அதில் அவர்கள் எந்தப் பொருட்களை தேர்வு செய்கிறார்களோ அந்தப் பொருட்களை கொண்டு என்ன செய்வார்கள் என்று அவர்களே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அதன் மேல் ஆர்வம் ஏற்பட வேண்டும். அப்படி ஏற்பட்டுவிட்டால் போதும், அவர்கள் பல விஷயங்களை கற்றுக் கொள்வார்கள்.

எல்லா குழந்தைகளுக்கும் மண்ணில் விளையாடுவது பிடிக்கும். மண்ணில் கோவில் கட்டுவது, வீடு கட்டுவது என பலவற்றையும் செய்ய விரும்புவார்கள். நாம்தான் அது ஹைஜீனிக் இல்லை என்று தடுத்துவிடுகிறோம். இதனால் அவர்களின் விரல்களுக்கு நல்லது என் பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்களின் எண்ணம் மற்றும் செயல்களுக்கு சுதந்திரம் கொடுத்து, அதற்கு ஆசிரியர் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பது தான் எங்க பள்ளியின் பாலிசி’’ என்ற ராஷ்மி, அவர்கள் பள்ளியில் பாடங்களை கற்றுத் தரும் முறை பற்றி விவரித்தார்.
‘‘பாடங்கள் பொறுத்தவரை புத்தகத்தில் இருப்பை நாங்க மனப்பாடம் செய்யச் சொல்வதில்லை.

அதாவது அவர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றால், அவர்களை குழுவாக அமரச் செய்து, பேச்சு, பாட்டு என செயல்வழி முறையில் கற்றுத் தருகிறோம். தினமும் குழந்தைகளுக்கு நடைப் பயிற்சியும் அளிக்கிறோம். அவர்கள் செல்லும் வழியில் காணப்படும் இலை, செடிகளை பற்றி அந்த இடத்திலேயே அவர்களுக்கு சொல்லித் தருகிறோம். மேலும் பல நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் எங்க பள்ளி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வருகிறார்கள். சில சமயம் வெளிநாட்டில் இருந்து கல்வியாளர்கள் வருவதுண்டு. மெக்கானிக்கல் இஞ்சினீயரிங் படித்து வரும் மாணவர்கள் எங்க பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பரிசோதனைகள் செய்து காண்பித்தது மட்டுமில்லாமல் அதை அவர்களுக்கு
கற்றும் தருவார்கள்.

இதனால் அவர்களுக்கு பாடப் புத்தகங்களை தாண்டி பல வெளியுலக அனுபவங்களும் கிடைக்கிறது. அது அவர்களின் எதிர்கால வாழ்க்கை பயணத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும். இயற்கையோடு கலந்து வித்தியாசமான முறையில் நடைமுறை கல்வியினை கண்டிப்பாக இங்கு குழந்தைகளுக்கு தர முடியும்’’ என்கின்றனர் ராஷ்மி மற்றும் ரஜ்னீஷ் தம்பதியினர். ‘‘நாங்க 1991ம் ஆண்டு குமாவூன் மலைப் பிரதேசத்திற்கு குடிபெயர்ந்ேதாம். பணம் சம்பாதிப்பது என்பது மட்டுமே வாழ்க்கையில்லை, அமைதியான வாழ்க்கைக்கு பணம் ஓரளவு உதவினால் போதும் என்ற எண்ணத்தில் தான் நாங்க இங்கு வந்தோம்.

இங்கு மின்சார இணைப்பு சரியாக இருக்காது. அதனால் சோலார் எனர்ஜி நிறுவனம் ஆரம்பித்து அதன் மூலம் மின்சாரம் கிடைக்க வழி செய்து வந்தோம். ஆனால் அதையும் பெற முடியாத நிலையில் பலர் இங்கு வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு வேறு வகையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர விரும்பினோம். இங்கு உள்ள பெரும்பாலானோர் நெசவாளர்கள் என்பதால், நெசவு தொழிலை நல்ல லாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற முடிவு செய்தோம். இந்த தொழிலில் வருமானம் குறைவு என்பதால் அடுத்த தலைமுறையினர் வேறு தொழிலுக்கு செல்ல ஆரம்பித்தனர்.

இது நம்முடைய பாரம்பரிய தொழில். அதை மீட்க விரும்பினோம். அதன் அடிப்படையில் இயற்கை சாயம் பயன்படுத்தி பட்டு, கம்பளி ஜவுளிகள், இயற்கை சாயப் பொடிகள், கலைப் பொருட்கள் போன்றவற்றை தயாரிக்க துவங்கினோம். நாங்க தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காகவே ‘அவனி’ மற்றும் ‘எர்த் கிராஃப்ட்’ என்ற நிறுவனம் துவங்கி அதன் மூலம் விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.

அனைத்தும் இயற்கை முறையில் தயாரிப்பதால், மக்களும் அதற்கு ஆதரவு தர முன்வந்தார்கள். இதன் மூலம் சுமார் 2000த்துக்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் மற்றும் நெசவு செய்யும் பெண்களுக்கு எங்களால் ஒரு நிரந்தர வருமானத்தினை கொடுக்க முடிகிறது என்று நினைக்கும் போது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார் ராஷ்மி.

தொகுப்பு: சித்ரா சுரேஷ்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?