சென்னை: புழல் ஏரிக்கு தண்ணீர் வரத்தால் சென்னையில் குடிநீர் பிரச்னை ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மக்களுக்கு புழல் ஏரியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் புழல் பகுதியில் மழை பெய்தது. மேலும், கிருஷ்ணா கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. மற்றொரு ஏரியான சோழவரம் ஏரியில் இருந்து நேற்று காலை முதல் உபரிநீர் வினாடிக்கு 200 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, புழல் ஏரியில் தண்ணீர் இருப்பு 2173 மில்லியன் கன அடியாக உள்ளது. இதையடுத்து சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 159 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. எனவே, கோடை காலத்தில் புழல் ஏரி கடல் போல் காட்சி அளிப்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது புழல் ஏரியில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. இதனால், கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படாது’’ என்று தெரிவித்தனர்.