சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் ஆகியோர் நேற்று முன்தினம் புழல் சிறையில் திடீரென சோதனை நடத்தினர். இந்நிலையில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவை நேற்று நீதிமன்றத்திற்கு அழைத்த நீதிபதிகள், புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டதாக தொடர்பாக தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள், முன்கூட்டியே அதிகாரிகளுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் புழல் சிறையின் அனைத்து பகுதிகளுக்கும் நடந்து சென்றே சோதனை நடத்தினோம். அப்போது சிறையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்த்தபோது அந்த பகுதிகள் முழுமையாக தூய்மையாக இருந்தன. கைதிகளுக்கான உணவை சாப்பிட்டு பரிசோதித்து பார்த்தபோது உணவு தரமானதாகவும், சுவையாகவும் இருந்தது. கொடுங்குற்றத்திற்காக சிறையில் அடுக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்த போது அவர்களும் சிறை வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்தனர்.
அரசின் இந்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. சிறை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மேலும் சில யோசனைகளை வழங்க இருக்கிறோம். இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்கின் மூலம் எந்த ஆலோசனைகளை வழங்கினாலும் அதனை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது. சிறைகளின் வசதிகளை தமிழக அரசு சர்வதேச தரத்தில் உயர்த்தியுள்ளோம். கோவை மத்திய சிறையில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலை மூலம் விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.