சென்னை: தமிழ்நாட்டில் உள்ள புதிரை வண்ணார் மற்றும் பழங்குடியின மக்களின், சமூக, பொருளாதார, கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென தனியாக புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில், திருத்தியமைத்து அரசாணை வெளியிடப்பட்டது. புதிரை வண்ணார் நல வாரியத்துக்கு அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் செ.ஸ்டாலின்குமார், க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம் தொகுதி, மு.பன்னீர்செல்வம், (சீர்காழி தொகுதி) மற்றும் 6 இதர அலுவல்சாரா உறுப்பினர்களும், தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரியத்துக்கு அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட எம்எல்ஏ கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம் தொகுதி) மற்றும் 15 இதர அலுவல்சாரா உறுப்பினர்களும் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நல இயக்குநர் ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.