மும்பை:உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் ஆட உள்ள இந்திய அணியில் ரிஷப் பன்ட், கே.எல்.ராகுல், ஜஸ்பரீத் பும்ரா ஆகியோர் காயம் காரணமாக விலகியிருப்பதால், அவர்களுக்கு மாற்றாக யாரை தேர்ந்தெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்து மைதானத்தில் 4 வேகப்பந்து வீச்சாளர், ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கினால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலை உள்ளதால் ஜடேஜா, அஸ்வின் ஆகியோரில் ஒருவர்தான் களமிறக்கப்படுவார் என தெரிகிறது.
இந்நிலையில், இந்திய லெவன் அணி எப்படி இருக்கும் என்பது குறித்து மாஜி வீரர் முகமது கைப் கூறுகையில், “இறுதி போட்டியில் ஓபனர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோரும், 3வது இடத்தில் விராட் கோஹ்லியும், 4, 5 ஆகிய இடங்களில் அஜிங்கிய ரகானே, கேஎஸ் பரத் ஆகியோர் விளையாடினால் நன்றாக இருக்கும். 6வது இடத்தில் அதிரடி ஆட்டக்காரர் களமிறங்கினால்தான், அணி பலமிக்கதாக இருக்கும் என்பதால் விக்கெட் கீப்பராக இஷான் கிஷனை தேர்வு செய்ய விரும்புகிறேன்.
பந்துவீச்சாளர்கள் இடத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கு நிச்சயம் இடமுண்டு. முகமதுஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோருக்கும் வாய்ப்புகளை வழங்குவேன். எஞ்சிய ஒரு இடத்திற்கு அஸ்வின் அல்லது ஷர்தல்தாகூர் ஆகியோரில் ஒருவரை காலநிலைக்கு ஏற்ப களமிறக்கலாம்’’ எனத் தெரிவித்தார்.விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்தும் அதிரடியாக ஆடக்கூடியவர்தான். அதே நேரத்தில் முக்கிய வீரரான புஜாராவை, முகமது கைப் ஏன் மறந்துவிட்டார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.