விராலிமலை: புதுகை அருகே திருநல்லூர் குளத்தில் நேற்று காலை மீன்பிடி திருவிழா நடந்தது. பொதுமக்கள் ஆர்வமுடன் மீன் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளங்களில் இந்தாண்டுக்கான மீன்பிடி திருவிழா தொடங்கியதால் மீன் பிரியர்கள், பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அந்த வகையில், விராலிமலை அடுத்துள்ள திருநல்லூர் பெரிய குளத்தில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நேற்று காலை நடைபெற்றது. ஊர் முக்கியஸ்தர்கள் துண்டு வீசி மீன்பிடியை துவக்கி வைத்தனர்.
அப்போது கரையில் அதிகாலை முதல் காத்திருந்த இளைஞர்கள், பெண்கள் உற்சாகத்துடன் போட்டி போட்டு குளத்தில் இறங்கி கச்சா, வலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்பிடித்தனர். விரால், கெண்டை, கட்லா, குரவை உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை மகிழ்ச்சியுடன் பிடித்து செல்லலாம் என்று வந்த மீன் பிடியாளர்களின் வலையில் மீன் சிக்காமல் முள் செடிகளும், பாசிகளும் மட்டுமே சிக்கியது. பொதுவாக மீன் பிடி திருவிழாவில் ஒரு குளத்தில் சுமார் 100 முதல் 300 கிலோ வரையிலும் மீன்கள் சிக்கும். ஆனால் சுமார் 25 கிலோ வரை மீன்களே சிக்கின. இதனால் அதிகாலை முதல் மீன்பிடித்தவர்கள் மீன்கள் ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.