Saturday, July 19, 2025
Home செய்திகள்Showinpage புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு: பாஜ அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா: முதல்வர், சபாநாயகரிடம் கடிதம் வழங்கினர்

புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு: பாஜ அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா: முதல்வர், சபாநாயகரிடம் கடிதம் வழங்கினர்

by Ranjith

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜவைச் சேர்ந்த அமைச்சர், 3 நியமன எம்எல்ஏக்கள் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை தேஜ கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ்- பாஜ இணைந்து சந்தித்தது. இதில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது.

முதல்வராக ரங்கசாமியும், என்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவியும், துணை சபாநாயகர் பதவியும் கொடுக்கப்பட்டது. அதேபோல் பாஜவில் 2 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவியும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜ கட்சியை சேர்ந்த ராமலிங்கம், அசோக் பாபு மற்றும் வெங்கடேசன் ஆகிய மூவருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இவர்கள் நியமன எம்எல்ஏக்களாக செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தற்போது பாஜ நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகிய 3 பேரும் சபாநாயகர் செல்வத்தை சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை 3 பேரும் சட்டசபை செயலர் தயாளனிடம், சபாநாயகர் செல்வம் முன்னிலையில் வழங்கினர்.

முன்னதாக நேற்று காலை புதுச்சேரி வந்த பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவிடம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி எம்பி மற்றும் பாஜ நிர்வாகிகள் கட்சித் தலைமை அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், கட்சி மாநில தலைவர் செல்வகணபதி எம்பி ஆகியோர் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இதன் பிறகே சபாநாயகர் செல்வம் அறையில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளனர். புதிய நியமன எம்எல்ஏக்களாக காரைக்காலைச் சேர்ந்த ஜிஎன்எஸ் ராஜசேகரன், ஊசுடு தொகுதியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், பாஜ மூத்த நிர்வாகி முதலியார்பேட்டை செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜ கட்சியை சேர்ந்த ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் சாய் சரவணன்குமார், நேற்று சட்டசபையில் உள்ள அறைக்கு தனது மனைவியுடன் வந்தார்.

பின்னர் அங்கு மனைவியுடன் சாமி கும்பிட்டுவிட்டு, சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் சென்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கினார். இவருக்கு பதிலாக அமைச்சர் பதவியை காமராஜர் நகர் தொகுதி பாஜ சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமாருக்கு வழங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதனால் விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் சாய் சரவணன் குமார் ராஜினாமாவை ஏற்பதாக முதல்வரும், 3 நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமவை ஏற்பதாக சபாநாயகரும் அறிவித்துள்ளனர்.

* ‘மோடி சொன்னார் நான் செய்தேன்’
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து சாய் சரவணன்குமார் கூறுகையில், ‘பாஜகவில் இணைந்து ஊசுடு தொகுதியில் பல ஆண்டுகளாக மக்களை சந்தித்த எனக்கு அவர்கள் நம்பிக்கையுடன் எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்தனர். பிரதமர் மோடி இதே நாளில் (ஜூன் 27ம்தேதி) அமைச்சராக்கி என்னை அழகுபார்த்தார்.

இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென பிரதமர் என்னிடம் கூறியிருக்கிறார். அவரது தலையாய உத்தரவை ஏற்று ராஜினாமா செய்ய முதல்வரை சந்திக்க செல்கிறேன்’ என்றார். இதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு, ‘பிரதமர்தான் எனக்கு பதவி கொடுத்தார். இது அவரது உத்தரவு’ என தொிவித்தார்.

* பாஜ தலைவராகிறார் வி.பி.ராமலிங்கம்
புதுச்சேரி மாநில பாஜ தலைவராக இருந்த செல்வகணபதி எம்பி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக வி.பி.ராமலிங்கத்தை நியமிக்க பாஜ தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அப்பதவிக்கு நமச்சிவாயம் உள்ளிட்ட சிலரது பெயர்கள் தொடர்ந்து அடிபட்ட நிலையில், பாஜவில் அதிருப்தி கோஷ்டி பிரச்னையால் இவ்விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது பொதுத்தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், கட்சியை வலுப்படுத்தும் வகையில் இந்த மாற்றத்தை பாஜ தேசிய தலைமை எடுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi