சென்னை: சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் மேயர் பிரியா “மக்களைத் தேடி மேயர்” திட்டத்தின் கீழ் 22.07.2023 அன்று மண்டலம்-4க்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளார்கள்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், “மக்களைத் தேடி மேயர்” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.
அதனடிப்படையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை களையும் பொருட்டு, “மக்களைத் தேடி மேயர்” திட்டம் 03.05.2023 அன்று மண்டலம்-5ல் தொடங்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், 31.05.2023 அன்று மண்டலம்-6லும், 05.07.2023 அன்று மண்டலம்-13லும் சம்பந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் 22.07.2023 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மேயர் பிரியா மண்டலம்-4க்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.
எனவே, சென்னை மாநகராட்சி, மண்டலம்-4க்குட்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில்வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயனடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.