ஈரோடு : ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ளது வெள்ளோடு பறவைகள் சரணாலயம்.ராம்சார் குறியீடு பெற்ற இந்த பறவைகள் சரணாலயத்துக்கு தினமும் சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பறவைகள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தினமும் நூற்றுக் கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சென்னிமலை சாலையில் இருந்து பறவைகள் சரணாலயத்தை சென்றடைய செல்லும் சுமார் 2 கி.மீ. தார்சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், இந்த வழியாக புங்கம்பாடி, வி.மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் செல்ல அந்தச் சாலையே பயன்பாட்டில் இருப்பதால் அப்பகுதி மக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தவிர, வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தின் நுழைவு வாசல் பகுதியில் இருந்து புங்கம்பாடி செல்லும் சாலையும் சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு மேல் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, இந்த தார்சாலைகளை முறையாக புதுப்பித்து புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், அப்பகுதிவாழ் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.