திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடைகளின் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி தீ வைப்பதால் பல்வேறு பகுதிகளில் புகை மூட்டம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மர்ம நபர்கள் சிலர் ஜக்காம்பேட்டை அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளுக்கு தீ வைத்ததால் அப்பகுதியில் தீ வேகமாக பரவி சாலையில் வெப்ப அலை வீசியது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த திண்டிவனம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் முரளி தலைமையிலான தீயணைப்புதுறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதே போல் வெள்ளிமேடுபேட்டை சமத்துவபுரம் அருகே குடியிருப்பு அருகில் குப்பை குவியலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் குடியிருப்பு வாசிகள் அவதி அடைந்தனர். தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வெயில் காலத்தில் இதுபோன்று குப்பைகளுக்கு தீ வைப்பதால் பெரும் தீ விபத்து அபாயம் ஏற்படும் என்று தீயணைப்பு துறையினர் அறிவுறுத்திய போதும் பொதுமக்கள் அதை கடைபிடிக்காததால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் குப்பை கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.