ஆரணி :ஆரணி ஊராட்சி ஒன்றியம் வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிதங்கல் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் தெரு, சின்னத்தெரு, நடுத்தெரு ஆகிய பகுதியில் உள்ள சாலைகள் பழுதடைந்துள்ளது.
சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இதையடுத்து, மகாத்மா காந்தி தேசிய ஊர வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2023- 2024ம் ஆண்டு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
அதன்பின்னர், சில வாரங்களில் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழிமாக இருப்பதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை சீரமைக்க கோரி ஆரணி – வாழைப்பந்தல் செல்லும் சாலை கள்ளித்தந்தல் கூட்ரோட்டில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல், அறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தகவல் தெரிவித்து சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலந்து சென்றனர்.