Tuesday, March 25, 2025
Home » சொல்லாததையும் செய்துள்ளோம் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம்: 712 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சொல்லாததையும் செய்துள்ளோம் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம்: 712 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Mahaprabhu

சென்னை: தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாததையும் நிறைவேற்றி காட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, டிக்காஸ்டர் சாலையில் அமைந்துள்ள டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சந்திரயோகி சமாதி, ராதா கிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் ஆகிய திட்டப் பகுதிகளில் 712 குடியிருப்புதாரர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி பேசியதாவது: வடசென்னையை வளர்ச்சி சென்னையாக, எப்படி இன்றைக்கு மத்திய சென்னை, தென்சென்னை வளர்ந்து வந்திருக்கிறதோ அதேபோல், இந்த வடசென்னை பகுதியையும் மாற்றிட வேண்டும், அதைவிட பெரிதாக உருவாக்கிட வேண்டும் என்பதற்காகதான் நம்முடைய அரசு இன்றைக்கு சிறப்பாக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

முதலில் நான் வடசென்னை பகுதிக்காக சட்டமன்றத்தில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து வடசென்னை வளர்ச்சி திட்டம் உருவாக்கப்பட இருக்கிறது என்று நான் அறிவித்தேன். இப்போது 1000 கோடி அல்ல, ரூ.6,400 கோடியாக உயர்த்தப்பட்டு பணிகளையெல்லாம் நாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். அதேபோல், நகர்புற வாழ்விட மேலாண்மை வாரியத்தின் சார்பில், ரூ.5,059 கோடி மதிப்பீட்டில் 23 மாவட்டங்களில் 44,609 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்கள் 100க்கு 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றிக்காட்டியிருக்கிறோம். இன்னும் மீதி இருக்கும் திட்டங்கள் என்னென்ன என்று நீங்கள் கேட்கலாம். இதில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அறிவித்த திட்டங்கள் பல. தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அது என்ன என்று கேட்டால், உதாரணத்திற்கு ஒன்றினை நான் சொல்கிறேன். புதுமைப்பெண் என்கின்ற திட்டம் தேர்தல் வாக்குறுதிகளில் வழங்கப்படவில்லை.

புதுமைப்பெண் திட்டம் என்று சொன்னால், பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கல்லூரிக்கு செல்கின்றபோது மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்து இன்றைக்கு அது வழங்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், இன்றைக்கு இந்த மாணவிகளெல்லாம் என்னைப் பார்த்து அப்பா, அப்பா என்று அழைக்கக்கூடிய ஒரு உணர்ச்சிகரமான நெகிழ்ச்சியான செய்தியை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அந்த அளவிற்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல. மாணவிகளுக்கு மட்டும்தானா, எங்களைப்போன்ற மாணவர்களுக்கு இல்லையா? என்று மாணவர்கள் கேட்டார்கள். உங்களுக்கும் உண்டு என்று சொல்லி தமிழ் புதல்வன் என்ற திட்டத்தை உருவாக்கி மாணவர்களுக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது காலை 8 மணிக்கு செல்ல வேண்டும் என்று சொன்னால், அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கூலி வேலைக்கோ வேறு எந்த வேலைக்கோ செல்கின்ற சூழ்நிலையில், அவர்களால் சமைத்து, குழந்தைக்கு உணவை கொடுத்துவிட்டு பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதை உணர்ந்த இந்த ஆட்சி உடனடியாக அவர்களுக்காக ஒரு திட்டத்தை கொண்டுவந்தது. என்ன திட்டம் என்று சொன்னால், காலை உணவு திட்டம். மதிய உணவு திட்டம் என்ற பெயரில் நீதிக் கட்சி ஆட்சியில் இருந்தபோது தியாகராயரால் கொண்டுவரப்பட்ட திட்டம். அந்த திட்டத்தை தான் காமராஜர் ஆட்சியின் காலத்தில் அதை பரவலாக்கி எல்லோருக்கும் சேருகின்ற வகையில் அதை நிறைவேற்றி காட்டினார்.

அதற்கு பிறகு எம்.ஜி.ஆர் சத்துணவாக வழங்க வேண்டும் என்று சொல்லி சத்துணவு திட்டம் என்ற பெயரில் எம்.ஜி.ஆர் அதை தொடர்ந்து நிறைவேற்றினார். அதற்கு பிறகு தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அது உண்மையான சத்துணவு என்று சொல்லி 5 நாட்கள் முட்டையுடன் கூடிய சத்துணவு திட்டத்தை நிறைவேற்றி தந்தார். அதற்கு பிறகு, தற்போது திராவிட மாடல் ஆட்சியில் அதையும் தாண்டி நம்முடைய வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றபோது நாம் உணவை கொடுக்காமல் அனுப்பிவைக்கிறோமே என்ற ஏக்கத்தில் இருந்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையக்கூடிய வகையில் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடன் அவர்களுக்கு காலை உணவுத் திட்டம் என்ற பெயரிலே காலை உணவினை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

இதையெல்லாம் நான் எடுத்துச் சொல்வதற்கு காரணம். இதுஎல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் இல்லை. இல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியிருக்கும் ஆட்சி தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சிறப்பான ஆட்சியை இன்றைக்கு உங்களுக்காக வழங்கிக்கொண்டிருக்கும் ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றியழகன், பரந்தாமன், ஜோசப் சாமுவேல், மேயர் பிரியா, துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மேலாண்மை இயக்குநர் பிரபாகர், அரசு துறை அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

16 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi