Sunday, December 3, 2023
Home » ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் சேலம் மாநகரில் 50 இ-பஸ்கள் இயக்க திட்டம்: அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் சேலம் மாநகரில் 50 இ-பஸ்கள் இயக்க திட்டம்: அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

by Francis

சேலம்: ஒன்றிய அரசின் இ-பஸ் சேவா திட்டத்தின் கீழ் சேலம் மாநகர பகுதியில் 50 இ-பஸ் ஒதுக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சென்னை, விழுப்புரம், சேலம், கும்பகோணம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி என எட்டு கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. அனைத்து கோட்டங்களிலும் பழுதடைந்த நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான பஸ்கள் புனரமைப்பு செய்யப்பட்டு, அதற்கு வெளி மஞ்சள் கலர் அடிக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் வகையில் இ-பஸ் சேவை கொண்டுவர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற இ-பஸ் சேவைகள் மூலம் மாசு பெருமளவில் தவிர்க்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுக்காக்கப்படும். இந்த இ-பஸ் விரைவில் தமிழகத்திற்கு வர இருக்கிறது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டமானது, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங்களில் மொத்தம் 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இதில் நகரம், புறநகரம், மலைப்பஸ்கள் உள்பட சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 893 பஸ்களும் சேர்த்து 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. தினசரி 9.19 லட்சம் கிலோமீட்டர் பஸ்கள் இயக்கப்படுகிறது. 14 லட்சம் பயணிகளும், சாதாரண கட்டணம் டவுன் பஸ்களில் 6 லட்சம் மகளிர்கள் பயணம் செய்கின்றனர். இந்தியாவில் டெல்லி, மும்பை, கல்கத்தா, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் தற்ேபாது டீசல் பயன்பாடு இல்லாத எலக்ட்ரானிக் பஸ்கள் எனப்படும் இ-பஸ் சேவை நடைமுறையில் உள்ளது.

இந்த இ-பஸ் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பிரதமரின் ‘இ-பஸ் சேவா’ திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருப்பூர் உள்பட 10 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இ-பஸ் சேவா திட்டத்தின் சேலம் நகரத்திற்கு 50 இ-பஸ்கள் ஒதுக்கப்படவுள்ளது. இ-பஸ் கொண்டு வருவதற்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பணிமனைகளில் மின்சாரம் பயன்பாடு, சார்ஜிங் பாய்ண்ட், பராமரிப்பு இடம், பஸ்கள் நிறுத்துவதற்கான இடம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இ-பஸ் பராமரிப்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொண்ட பின்பு, இ-பஸ் பயன்பாட்டுக்கு வரும். இந்த இ-பஸ் சேலம் மாநகரத்தில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

 

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?