சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 4 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி நேற்று பத்திரிகையாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில், 4 ஆண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகள், மக்களுக்கான முக்கியமான திட்டங்கள் குறித்து ஒவ்வொரு துறையின் செயலாளர்களும், அமைச்சர்களும் பத்திரிகையாளர்களுக்கு வீடியோ மூலமாகவும் விளக்கினர்.
அப்போது அதிகாரிகள் தெரிவித்த விவரங்கள் வருமாறு: ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’ என்ற நோக்கத்துடன் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் தமிழகம் அபரிமிதமான ஏற்றத்தை கண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் 9.69 சதவீதம் அதிகரித்து இந்தியாவில் வேறு எந்த மாநிலமும், அடையாத வளர்ச்சியை அடைந்தது. அதேபோல், கடந்த 2020-21ம் நிதியாண்டு முதல் 2024-25ம் நிதியண்டு வரை ஏற்றுமதியில் இரட்டிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது.
இதுமட்டுமின்றி, மின்னணு ஏற்றுமதி வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் 2025ம் நிதியாண்டில் 14.65% வளர்ச்சியை பெற்றுள்ளது. மேலும், சமூக அளவீடுகளின்படி பிரசவத்திற்கான இறப்பு விகிதம் கடந்த 2021-22ம் ஆண்டு 90.6 சதவீதமாக இருந்தவை கடந்த 2024-25ம் ஆண்டு 39.6 சதவீதமாக குறைந்துள்ளது. இதுதவிர தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியின் சாதனை பட்டியல் முக்கிய அம்சம் பின்வருமாறு:
சட்டம் மற்றும் ஒழுங்கு
* தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பெரியளவில் சாதி மற்றும் மதம் சார்ந்த பிரச்னை தவிர்க்கப்பட்டுள்ளன.
* கடந்த 2022ம் ஆண்டு முதல் காவல் நிலைய மரணங்கள் எதுவும் நிகழவில்லை.
* பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் (இந்தியா – 66.4 / தமிழ்நாடு – 24)
* தொழில்துறையில் முன்னணி மாநிலம்
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளும் பணியாளர்களும் உள்ளனர். அதேபோல், இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழகத்தில் தான் பெண் பணியாளர்களின் பங்களிப்பு உள்ளது.
* முதலீட்டு சிறப்பம்சங்கள்
கடந்த 4 ஆண்டுகளில் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ.10.28 லட்சம் கோடி முதலீடு, 32.23 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு , 624 திட்டங்கள் ஒப்புதலுக்காக விண்ணப்பிக்கப்பட்டு பல்வேறு மேம்பட்ட நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முத்திரை திட்டங்கள்
* கலைஞர் நூற்றாண்டு நூலகம் – மதுரை
* கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கம்
* திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை – இணைப்பு கண்ணாடி இழைப்பாலம்
* எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி
* கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை
* சர்வதேச கலைஞர் கன்வென்சன் சென்டர் – முட்டுக்காடு
* தந்தை பெரியார் நூலகம் – கோவை
* பெருந்தலைவர் காமராஜர் நூலகம் – திருச்சி
* கோயில் பராமரிப்பு
திருக்கோயில்களில் ஆக்கிரமிப்பிலிருந்து ரூ.7,658 கோடி மதிப்பிலான 7,439 ஏக்கர் நிலங்கள், 1,532 கிரவுண்ட் காலிமனைகள், 253
* கிரவுண்ட் கட்டிடங்கள் மீட்கப்பட்டுள்ளன.
2,820 திருக்கோயில்களுக்கு திருக்குட நன்னீராட்டல்.
ஊரக மற்றும் நகர்ப்புற கட்டமைப்பு
* நெடுஞ்சாலைத் துறையில் ரூ.21,410 கோடியில் 12,171 கி.மீ சாலைகள்
* நகராட்சி நிர்வாக துறையில் ரூ.4,782 கோடியில் 6,730 கி.மீ சாலைகள்
* ஊரக வளர்ச்சித்துறையில் ரூ.12,736 கோடியில் 25,318 சாலைகள்
* பெரிய குடிநீர் திட்டங்கள்
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.11,100 கோடி மதிப்பில் 86 புதிய குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, நாகப்பட்டினம் கூட்டு குடிநீர் திட்டம் – ரூ.1751 கோடி, விருதுநகர், தூத்துக்குடி கூட்டு குடிநீர் திட்டம் – ரூ.1388 கோடி, மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம் – ரூ.1536 கோடி, ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் – ரூ.3851 கோடி.
* விடியல் பயணம்
மகளிர் விடியல் பயணம் மூலமாக மாதத்திற்கு ரூ.888 சேமிக்கப்பதாக மாநில திட்டக்குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* நிதி மேலாண்மை
தமிழகத்தில் நிதி பற்றாக்குறை திறம்பட கட்டுப்படுத்தப்பட்டு, வருவாய் பற்றாக்குறை கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது.
இதுபோல் இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களின் வழி தமிழகம் நாட்டின் முன்னோடி மாநிலமாக பீடு நடை போடுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா மற்றும் இந்து அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், கல்வித்துறை செயலாளர் சந்தரமோகன், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன், மனித வள மேம்பாட்டுத்துறை இயக்குநர் கிராந்திகுமார், ஆகியோர் துறையின் திட்டங்கள் குறித்து விளக்கினர்.