Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சாலையை கடக்க முயன்றபோது கலவை லாரி மோதியதில் தனியார் கம்பெனி பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்: நடந்து சென்றவருக்கு 2 கால்கள் முறிவு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலையை கடக்க முயன்ற தனியார் கம்பெனி பேருந்து மீது கலவை லாரி மோதிய விபத்தில், இரண்டு கால்கள் முறிந்தவர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டையில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நேர பணியை முடித்துவிட்டு நேற்று அதிகாலையில் 9 ஊழியர்கள் வீட்டிற்கு செல்வதற்காக கம்பெனிக்கு சொந்தமான பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது, தண்டலம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றபோது, பின்னால் வந்த சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில், பேருந்து கவிழ்ந்தது லாரியின் முன்பகுதி நொறுங்கியது. பேருந்தில் பயணம் செய்த கம்பெனி ஊழியர்கள் அலறி கூச்சலிட்டனர். மேலும், எதிர்திசையில் சென்னையில் இருந்து பெங்களூருவை நோக்கி சென்ற கார் மீதும் பேருந்து மோதியதில் காரும் சேதமானது.

இந்த விபத்தில், கம்பெனி பேருந்து டிரைவர் உட்பட 9 பேர் பலத்த காயமடைந்தனர்.

மேலும், அந்த நேரத்தில் சாலையின் குறுக்கே கடந்து சென்ற ஒருவரின் இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. லாரி ஓட்டுநர், லாரியின் முன்பக்க இடர்பாடுகளில் சிக்கி தவித்தார். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், பொக்லைன் உதவியுடன் நொறுங்கிய லாரியில் இருந்து டிரைவரை மீட்டனர். பின்னர் காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது.