சென்னை: தனியார் வாகனங்களில் விதிகளை மீறி, அரசு சின்னங்கள் பயன்படுத்துவதற்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கையளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் வாகனங்களில், அரசு வாகனங்களுக்கு குறிப்பிடும் ‘ஜி’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், ‘இந்திய அரசு’, ‘தமிழ்நாடு அரசு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அரசு சின்னங்களையும், தமிழ்நாடு அரசு, இந்திய அரசு என வாகனங்களில் ஸ்டிக்கர்க்ளை ஒட்டிக் கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தனியார் வாகனங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அதற்கு, விதிமீறல்களுக்கு எதிராக வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கோர முடியும் என்று தலைமை நீதிபதி சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து, மனுவில் கோரிக்கையை திருத்தி தாக்கல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள, இதுபோன்ற விதிமீறல்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.