Thursday, December 7, 2023
Home » மாநில சுயாட்சி என்ற கொள்கை வெல்ல வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மாநில சுயாட்சி என்ற கொள்கை வெல்ல வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Ranjith

சென்னை: முதல்வராக மாநில சுயாட்சிக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மோடி பிரதமரானதும் அதை எதிர்க்கிறார். மாநில சுயாட்சி என்ற கொள்கை வெல்ல வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சி இயலுக்கான எனது குரல்” என்ற தலைப்பில் நேற்று (அக்.31ம் தேதி) வெளியிட்டுள்ள ‘‘ஸ்பிக்கிங் பார் இந்தியா பாட்காஸ்ட் சீரிசின்’’ மூன்றாவது அத்தியாயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்தியா முழுவதும் இந்த “Speaking for India” ரீச் ஆன பின்பு, அக்டோபர் 2வது வாரத்தில் ஒரு செய்தி வந்தது. அதன் தலைப்பு என்ன என்றால், பாஜ அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்த சி.ஏ.ஜி அதிகாரிகள் செப்டம்பர் 12ம் தேதியே கூண்டோடு மாற்றம். அதுதான் அந்தச் செய்தி. எவ்வளவு ஸ்பீடாக ஆக்‌ஷன் எடுத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா..? சரி… இந்த எபிசோடில் நான் பேசப்போவது: மாநில உரிமைகள். திமுக, தனக்கென்று தனித்துவமான கொள்கைகளோடு 75-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிற கட்சி மட்டுமல்ல.

இன்றைக்கு நாடாளுமன்றத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்து இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போராடுகிற கட்சியும் கூட. அப்படிப்பட்ட திமுக-வின் கொள்கைகளில் முக்கியமானது மாநில சுயாட்சி. இந்தியா என்பதே, கூட்டாட்சித் தன்மை கொண்ட நாடு. இங்கே பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் கொண்ட மக்கள் வாழுகிறார்கள். அதனால்தான், நம் நாட்டின் நிர்வாக அமைப்பை உருவாக்கியவர்கள், ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சி நெறிமுறை கொண்ட – மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கினார். நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி, இதற்கு முன்பு குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தார்.

அப்போதெல்லாம் மாநில உரிமைகளுக்கு ஆதரவாக நிறைய பேசினார். ஆனால், பிரதமராகி டெல்லிக்கு வந்ததற்கு பின்பு, அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரியே அவருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அந்த வரி என்ன என்றால், “India, that is Bharat, shall be a Union of States”. முதலமைச்சராக மாநில உரிமைகளைப் பேசியவர், இப்போது பிரதமராகி மாநில உரிமைகளைப் பறிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ ஆட்சி, மாநிலங்களை ஒழிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால், முனிசிபாலிட்டிகளாக மாற்றிட வேண்டும் என்று நினைக்கிறது. மோடி, முதலமைச்சராக இருந்த வரை பேசியதற்கும், பிரதமர் ஆனதும் செய்வதற்கும் இருக்கும் வேறுபாட்டிற்கு, சில எடுத்துக்காட்டுகளை மட்டும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.

* டெல்லியை மையப்படுத்தாமல் மாநிலங்களுக்கு ஏற்ற அணுகுமுறையோடு திட்டங்கள் தீட்டப்படும் என்று பிரதமர் சொன்னார். ஆனால், மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுக் கருத்து தெரிவிக்கும் திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, சத்தே இல்லாத ‘நிதி ஆயோக்’ அமைப்பை உருவாக்கினார்.

* மாற்றுக்கட்சி ஆட்சிகளைப் பழிவாங்கமாட்டேன் என்று சொன்னார். ஆனால் பாஜ என்ன செய்கிறது? எங்கு எல்லாம் பாஜ ஆட்சிக்கு வர முடியவில்லையோ, அங்கு இருக்கும் கட்சிகளை இரண்டாக, மூன்றாக உடைத்து, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்துகிறார்கள். முக்கியமாக இன்னொன்றையும் பிரதமர் சொன்னார்…

* “கூட்டாட்சிக் கருத்தியலை ஆதரிப்பவன் நான். டெல்லிக்குக் காவடி தூக்கும் நிலைமையை மாற்றுவேன்” என்று சொன்னார். ஆனால், இப்போது என்ன நடக்கிறது என்றால், மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றக்கூட, ஒன்றியை அரசின் வாசலில் காத்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

* மறைமுக வரிவிதிப்பில் சீர்திருத்தம் செய்ய எல்லா மாநில அரசுகளோடும் ஆலோசனை செய்வோம் என்று பாஜவின் தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள்.

* கூடுதலாகப் பிரதமர், மாநில அரசுகளுக்கு அதிக நிதி ஆதாரங்களை வழங்குவோம் என்று சொன்னார்… ஆனால், ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தைக் கூட நீட்டிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். மாநிலங்களின் பங்கையும் ஒழுங்காகக் கொடுப்பதில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மாநிலங்களின் நிதி நிலைமை ஜி.எஸ்.டி.யால் இப்போது ஐ.சி.யூ-வில் இருக்கிறது. 12வது நிதி கமிஷனில் இருந்து நிதி ஒதுக்கீடு குறைந்துவிட்டதால், கடந்த 19 ஆண்டுகளில் நம்முடைய தமிழ்நாட்டிற்கு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, இனிமே ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டிற்கு இழப்பு ஏற்படப் போகிறது. அதேமாதிரி, கிராமப்புற ஏழை – எளிய தாய்மார்களின் வாழ்வாதாரத்திற்கு உயிர்மூச்சாக இருக்கும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதியைக் குறைத்தது மட்டுமல்ல, வேலை செய்யும் தாய்மார்களுக்குச் சம்பளம் கூட ஒழுங்காகக் கொடுக்காமல் பாஜ ஆட்சியில் இழுத்தடிக்கிறார்கள்.ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு ஆக்‌ஷன் பிளானாகவே வைத்திருக்கிறது பாஜக.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பண்பு இருக்கிறது – ஒரு கலாசாரம் இருக்கிறது – அவர்களுக்கு என்று தனிப்பட்ட சிந்தனை இருக்கிறது. இதையெல்லாம் அழிப்பதற்கான கொள்கைதான் தேசிய கல்விக் கொள்கை. இது எல்லாவற்றில் இருந்தும் நம்மைப் பாதுகாக்க இருக்கும் ஒரே கவசம், மாநில சுயாட்சிதான். அதனால்தான், அண்ணாவும் – கலைஞரும் மாநில சுயாட்சியை வலியுறுத்தினர். நானும் வலியுறுத்திக்கொண்டு இருக்கிறேன். 1974-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர், நாட்டுக்கே முன்னோடியாக, மாநில உரிமைகளுக்கு வலுசேர்க்க இராஜமன்னார் குழு அமைத்தார்; அந்தக் குழுவின் பரிந்துரைகளைச் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநில சுயாட்சி தீர்மானமாக நிறைவேற்றினார்.

இவ்வாறு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தைத்தான், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களும், “These are important issues and we intend to consult all the Chief Ministers” என்று சொன்னார். தலைவர் கலைஞர் தி.மு.க.வின் கொள்கைகளை ஐம்பெரும் முழக்கங்களாகச் சொன்னார். அதில் ஐந்தாவது முழக்கம், “மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி.” இந்தக் குரலைத் தெற்கில் மட்டுமல்ல, வடக்கில் காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லா – கிழக்கில் வங்கத்தில் ஜோதிபாசு ஆகியோரும் எதிரொலித்தார்கள். இன்றைக்கு ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்பின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். விரும்பும், சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியை உருவாக்க நினைக்கிறது. அதனால்தான் அவர்கள் அரசியல் சட்டப்படியும் ஆட்சி நடத்தவில்லை;

மாநிலங்களையும் மதிக்கவில்லை. மாநிலங்களைச் செயல்படவிடாத ஒன்றிய அரசு, மாநில அரசின் சம்பளத்தைப் பெற்று மாநில நலனுக்கு எதிராக செயல்படுகிற ஆளுநர்கள், இவர்களை வைத்துக்கொண்டே எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்களால் செய்ய முடிகிறது என்றால், கூட்டாட்சி நெறிமுறைகளை மதிக்கும் ஒரு ஆட்சி, ஒன்றியத்தில் அமைந்தால், எல்லா மாநிலங்களும் மேலும் செழிக்கும். மாநில சுயாட்சி என்ற கொள்கை வெல்ல வேண்டும் என்றால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு மக்கள் தயாராக வேண்டும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மினி நாடாளுமன்றத் தேர்தலாகப் பார்க்கப்படும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கிறது.  அதில் வாக்களிக்கப் போகும் வாக்காளப் பெருமக்களும் இதை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நிறைவாக, இந்த எபிசோடைக் கேட்ட உங்களிடம் உரிமையோடு நான் கேட்பது, இந்தியா கூட்டணியின் கையில், இந்தியாவை ஒப்படையுங்கள். மாநிலங்களைக் காப்போம். இந்தியாவைக் காப்போம். இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்போம்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?