Friday, June 20, 2025
Home செய்திகள்Showinpage ஆறு முறை அல்ல, ஆயிரம் முறை வந்தாலும் பிரதமர் மோடியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஆறு முறை அல்ல, ஆயிரம் முறை வந்தாலும் பிரதமர் மோடியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

by Karthik Yash

சென்னை: பிரதமர் மோடி ஆறுமுறை அல்ல, ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞரணியின் 45ம் ஆண்டு தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இளைஞர் அணியின் தலைமைச் செயலகமான‌ அன்பகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு, திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான‌ உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் வருவாய் மாவட்ட வாரியாக இளைஞர் அணியின் சமூக வலைத்தளப் பக்கங்களையும், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான சமூக வலைத்தளப் பயிற்சியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பயிற்சியை 7 தொழில்நுட்ப வல்லுநர்கள் வழங்கினர். பின்னர் அமைப்பு நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புதிதாக தொடங்கப்பட்ட ‘உங்களுடன் உதயநிதி’ சமூக வலைத்தளப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும், விழாவில் 45 ஆண்டு கால இளைஞரணி செயல்பாடுகள் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.

விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிலேயே எந்த ஒரு இயக்கமும் அணியை தொடங்குவதற்கு முன்பே திமுகவில் இளைஞர் அணியை தொடங்கியவர் தலைவர் மு.க.ஸ்டாலின். அதேபோன்று திமுகவில் பல அணிகள் இருந்தாலும், அதில் முதல் அணி இளைஞர் அணிதான். அதை நாம் நிரூபித்தும் காட்டியிருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி 6 முறை தமிழ்நாட்டிற்கு வந்தார். எப்படியாவது 2 அல்லது 3 சீட் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். 6 முறை அல்ல ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் மோடியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றியையும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றியையும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

முதல்வர் எந்த பொறுப்புக்கு சென்றாலும், மிகப்பெரிய பொறுப்பை அடைந்தாலும், இளைஞர் அணியின் பிராண்ட் அம்பாசிடர் அவர்தான் என்பதை விரும்புவார். ஏனென்றால், உழைத்து இருக்கிறார். இன்றைக்கு முதலமைச்சர் எனும் பெரிய பொறுப்புக்கு வந்துள்ளார் என்றால் அதற்கு இளைஞர் அணிதான் அடித்தளமிட்டது. பாஜ வெறும் பொய்களை பரப்பி, பொய்களை பேசி அரசியல் செய்கிறது. ஆனால் நமக்கு திராவிட இயக்க வரலாறு இருக்கிறது. தற்போது சமூக வலைத்தளம் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் அனைவரும் சமூக வலைத்தளத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். மீண்டும் தமிழ்நாட்டை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் ஆள்வார். இதுதான் இளைஞர் அணியின் இலக்காக இருக்க வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார்.

* எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் இளைஞர் அணியை மறக்க மாட்டேன்
முதலமைச்சருக்கு நான் துணையாக வர வேண்டும் என்று இளைஞர் அணியினர் தீர்மானங்கள் எல்லாம் நிறைவேற்றி இருக்கிறீர்கள். பத்திரிகைகளில் வருகிற கிசுகிசுக்கள், வதந்திகளை எல்லாம் படித்து விட்டு வந்து, இது நடக்கப் போகிறதோ? அப்போ நாமும் ஒரு கோல் போட்டு வைத்து விடுவோம், துண்டுப் போட்டு வைத்து விடுவோம் என்ற அடிப்படையில் சிலர் பேசியும் இருக்கிறீர்கள். எப்படி தலைவர், எந்தப் பொறுப்புக்கு சென்றாலும் இளைஞர் அணி பொறுப்புதான் மனதுக்கு மிக, மிக நெருங்கிய பொறுப்பு என்று பலமுறை சொல்லி இருக்கிறார். துணை முதலமைச்சர் என்று பத்திரிகை நண்பர்கள் பல முறை என்னிடம் கேட்டபோது, சொன்னேன். எல்லா அமைச்சர்களும் எங்கள் முதல்வருக்கு துணையாகத்தான் இருப்போம் என்று. எவ்வளவு பெரிய பொறுப்புகள் வந்தாலும் என் மனதிற்கு மிக மிக நெருங்கிய பொறுப்பு என்றால் அது இளைஞர் அணி செயலாளர் என்ற பொறுப்புதான். எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞர் அணியை மறந்துவிட மாட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

* பொறுப்புகள் மாற்றம் குறித்து முதல்வர் தான் முடிவு செய்வார்
விழா முடித்து வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், “பொறுப்புகள் மாற்றம் குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு எப்போதும் இருக்கும். தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஏற்கனவே நீட் எதிர்ப்பு மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி உள்ளோம்” என்றார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi