புதுடெல்லி: பாஜ கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக நயினார் நாகேந்திரனை அண்மையில் அந்த கட்சியின் தலைமை நியமனம் செய்திருந்தது. இதையடுத்து மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட பிறகு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக முதன் முறையாக டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எல்.முருகன் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்திற்கு சென்று நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, அதிமுக பாஜக கூட்டணியின் நிலவரம், தொகுதி பங்கீடு ஆகியவை குறித்தும் சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. பிரதமரின் சந்திப்பை தொடர்ந்து நேற்று இரவு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த நயினார் நாகேந்திரன் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று தமிழ்நாடு திரும்புகிறார்.