அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு பிரதமர் மோடியை அழைக்க இருப்பதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியிருப்பதாவது: அக்டோபர் மாதத்திற்குள் கோயிலின் தரை தளம் தயாராகி விடும். டிசம்பருக்குள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்க தயாராகி விடும்.
அதைத் தொடர்ந்து, புதிய ராமர் சிலை கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும். இந்த விழாவில் பிரதமர் மோடியை அழைக்க சமீபத்தில் நடந்த உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டு, டிசம்பர் மற்றும் ஜனவரி 26ம் தேதிக்கு இடைப்பட்ட ஏதேனும் சாதகமான தேதி குறித்து அனுமதி கேட்கப்படும். இவ்வாறு கூறினார்.