சென்னை: கோயில்களில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் திருக்கண்ணபுரம் பெருமாள் கோயில் செயல் அதிகாரியால் மரபுகள் மீறப்படுவதாக கூறி ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயிலில் பாலாலயம் நடத்த இருப்பதாக செயல் அலுவலர் அறிவித்திருக்கிறார். எந்த திருப்பணிக்குழுவும் அமைக்கப்படாமல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. திருப்பணிக்காக நன்கொடையாக வசூலிக்கப்படும் பணம் எங்கிருந்து வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து எந்த விவரங்களும் இல்லை என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, திருப்பணிக்குழு அமைக்காமல் எப்படி பாலாலயம் நடத்தப்படுகிறது? திருப்பணிக்கு நன்கொடையாக வரும் பணம் தணிக்கை செய்யப்படுகிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், அர்ச்சகர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் பாலாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதா? நன்கொடை தணிக்கை செய்யப்படுகிறதா என்பது குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். கோயுல்களில் அர்ச்சகர்களின் தகுதியை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். சிறுவர்களும் அர்ச்சகர்களாக செயல்படுவதால், அர்ச்சகர்கள் நியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும். கோயில்களை சீரமைக்க அனுமதி வழங்கும் புராதன குழு உள்ளிட்ட குழுக்கள் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.