சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள இந்திய வம்சாவளி நபர் தர்மன் சண்முகரத்தினம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் மக்கள் செயல் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து கட்சி உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகுவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, தர்மன் நேற்று சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தர்மன் சண்முகரத்தினம் பொருளாதாரப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். 2001ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக அரசியலில் சேர்ந்த அவர் துணைப்பிரதமர், கல்வி அமைச்சர், நிதி அமைச்சர், சிங்கப்பூர் நாணய நிதியத் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.