புதுடெல்லி: ரயில்வே வேலை வாய்ப்பு ஊழல் வழக்கில் முன்னாள் ஒன்றிய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்துக்கு எதிராக வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். வேலைக்கு நிலம் கொடுத்தது தொடர்பான ஊழல் வழக்கில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக, நிலம் வழங்கினால் ரயில்வே துறையில் வேலை வழங்கப்படும் எனக் கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இந்த மோசடி வழக்கில் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் சிபிஐ 3 எப்ஐஆர் -ஐ தாக்கல் செய்துள்ளது. இதில் பண மோசடி நடந்துள்ளதால் இது குறித்து அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், லாலு பிரசாத்(76) உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்வதற்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.