டெல்லி : அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா என்று துணை ஜனாதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவை தொடர்பான நிகழ்வில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசியதாவது; குடியரசுத் தலைவர் பதவி என்பது மிக மிக உயர்ந்த நிலை மற்றும் மதிப்பு கொண்டது. நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்? நம் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா?. குடியரசு தலைவரை நீதிமன்றம் வழிநடத்தும் முறையை அனுமதிக்க முடியாது. பிரிவு 142 ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல உச்சநீதிமன்றம் மாற்றி உள்ளது. சட்டம் இயற்றுவது, நிர்வாக பணிகளை செய்வது போன்ற நாடாளுமன்ற பணிகளை நீதிபதிகள் செய்கின்றனர். சூப்பர் நாடாளுமன்றம் போல நீதிபதிகள் செயல்படுகின்றனர். ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை.இவ்வாறு தெரிவித்தார்.