சென்னை: கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் செய்ய இந்திய முறை மருத்துவ படிப்புகளை படித்தவர்களுக்கு தகுதி இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில் ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா போன்ற இந்திய மருத்துவ முறையான ஆயுஷ் மருத்துவ படிப்புகளை படித்து அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை தொடர்பான சான்றிதழ் படிப்பை முடித்த மருத்துவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு ஒலியியல் (சோனாலஜி) பரிசோதனைகள் செய்ய அனுமதிக்கும்படி ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு ஆயுஷ் ஒலியியல் பரிசோதனையாளர்கள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சிசு பாலின தேர்வு தடைச் சட்டத்தில் வரையறுத்துள்ள சிறப்பு தகுதிகளைப் பெறாத மருத்துவர்கள், இந்த சோதனைகளை நடத்த தகுதியில்லை என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு ஆயுஷ் ஒலியியல் பரிசோதனையாளர்கள் சங்கத்தின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலினத்தை கண்டறிவதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாத வரை சங்கத்தின் உறுப்பினர்களை அனுமதிப்பதில் எந்த பிரச்னையும் ஏற்படாது.
இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான பாடத்திட்டம் இ.சி.ஜி, எக்ஸ்ரே, அல்ட்ரா சோனோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையமும் தெளிவுபடுத்தி உள்ளது. எனவே, தங்களை அல்ட்ரா சோனோகிராம் பரிசோதனைகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய சுகாதார துறை, ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம், இந்திய மருத்துவத்துக்கான மத்திய கவுன்சில், ஊரக நலத்துறை இயக்குனர், இந்திய மருத்துவத்திற்கான தமிழ்நாடு வாரியம் ஆகியவை செப்டம்பர் 25ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.