Wednesday, June 25, 2025
Home செய்திகள் மின்தடையால் நீட் தேர்வில் பாதிப்பில்லை; மறு தேர்வு நடத்த முடியாது: ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல்

மின்தடையால் நீட் தேர்வில் பாதிப்பில்லை; மறு தேர்வு நடத்த முடியாது: ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல்

by Neethimaan

சென்னை: மின் தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறு தேர்வு நடத்த முடியாது என்று ஒன்றிய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே.கே. நகர் பத்ம சேஷாத்திரி பள்ளி மாணவன் ஒருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவுக்கு பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை ஆகியவற்றுக்கு உத்தரவிட்டதுடன், அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என்று வாதிட்டார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வெளிச்சம் இருந்தது என்பதை நிரூபிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகளை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் ஜூன் 6ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi