Saturday, December 2, 2023
Home » வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரையும் ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைக்க சொல்வதா?.. ஒன்றிய அரசின் மறைமுக உத்தரவால் மக்கள் குழப்பம்

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரையும் ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைக்க சொல்வதா?.. ஒன்றிய அரசின் மறைமுக உத்தரவால் மக்கள் குழப்பம்

by MuthuKumar

சென்னை: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரையும் ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைக்கச்சொல்லி ஒன்றிய அரசு மறைமுக உத்தரவு அளித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் மக்கள் நல திட்டங்களில் பொது விநியோகமும் ஒன்று. மக்களுக்கு அரிசி, சர்க்கரை போன்ற கட்டுப்பாட்டு பொருட்களை விநியோகித்திட தமிழகத்தில் 3,300 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது.

இந்த கடைகளில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2.5 கோடி குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1.5 கோடிக்கும் அதிகமாக வறுமைகோட்டிற்கு கீழான குடும்ப அட்டைகளாக பிஎச்எச் மற்றும் ஏஏஒய் (வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்) அட்டைகள் உள்ளது. அரிசி மற்றும் சர்க்கரை பெறும் என்பிஎச்எச் அட்டைகள் தமிழகத்தில் 90,08,842 உள்ளன. என்பிஎச்எச்-எஸ் குறியீடு உள்ள குடும்ப அட்டைகள் 10,01,605 உள்ளன. இவர்களுக்கு அரிசி தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களும் வாங்கலாம்.

பிஎச்எச் மற்றும் ஏஏஒய் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கூடுதல் அரிசி வழங்கப்படுகிறது. இதனால் பிஎச்எச் மற்றும் ஏஏஒய் அட்டையில் எத்தனை குடும்ப உறுப்பினர்கள் இருந்தாலும் அது பெரியவர், சிறியவர் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு வந்து, தமது கைவிரல் ரேகையை (பயோமெட்ரிக்) மிஷினில் வைத்தால் மட்டுமே ரேஷன் பொருட்களை பெற முடியும் என்று தற்போது ஒன்றிய அரசு மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம் தமிழ்நாடு அரசு இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. உதவி ஆணையர் பெயரில் ரேஷன் கடைகளில் அறிவிப்பு ஒட்டச் செய்துள்ளனர்.

ஒரு குடும்பத்தில் வயதான முதியவர் இருந்தாலும் அல்லது வெளியூரில் படிக்கும் குழந்தைகள் இருந்தாலும் பயோமெட்ரிக் வைக்க ரேஷன் கடைக்கு வரவில்லை என்றால் அந்த நபரின் பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படும் நிலை உள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் அந்த முகவரியில் இருக்கிறார்களா? என ஆய்வு செய்திட விருப்பம் இருந்தால், தன்னார்வலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட பிஎச்எச் மற்றும் ஏஏஒய் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்யலாம்.

தமிழ்நாடு அரசின் அறிவிப்பு இல்லாமல் ரேஷன் கடைக்காரர்களை விட்டு குடும்ப அட்டைதாரர்களிடம் இந்த விவரத்தை கேட்க சொல்லி, உணவு துறை மண்டல அதிகாரிகள் அச்சுறுத்துவதால் குடும்ப அட்டைதாரர்களுக்கும், ரேஷன் கடை பணியாளர்களுக்கும் இடையே வீண் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?