டெல்லி : பணப்பரிவர்த்தனைகளை நவீனமயமாக்கும் மற்றொரு முயற்சியாக நாடு முழுவதும் தபால் நிலையங்களில் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 1.55 லட்சம் தபால் நிலையங்கள் இருக்கின்றன. இவைகள் பெரும்பாலும் கிராம பகுதிகளில் உள்ளன. இந்திய தபால் துறை இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அது நேரம் நாட்டில் யுபிஐ மூலமாக பணப் பரிவர்த்தனை செய்யும் முறை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பெரும்பான்மை மக்களால் பயன்படுத்தப்படும் தபால் நிலையங்களில் யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த தபால் துறை திட்டமிட்டு இருந்தது.
இதற்கான சோதனை முயற்சி கர்நாடக மாநிலம் மைசூர் பாகல்காட் பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை முயற்சியில் வெற்றி அடைந்ததை அடுத்து வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நாடு முழுவதிலும் உள்ள தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை புழக்கத்திற்கு வர உள்ளது. புதிய நடைமுறையின் கீழ் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தபால் நிலைய கவுண்டர்களின் கியூ ஆர் கோட் குறியீட்டை ஸ்கேன் செய்து மக்கள் கட்டணங்களை செலுத்தலாம். இங்கு வரும் மக்கள் பேடிஎம், கூகுள் பே, போன் பே மூலம் யுபிஐ செயல்களை பயன்படுத்தலாம்.