பூந்தமல்லி: பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் சென்னை உள்பட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு 100க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரசு பேருந்துகளும் இங்கு வந்து செல்வது வழக்கம். பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்குள் பயணிகளை இறக்கிவிட அரசு பேருந்துகள் வேகமாக நுழைகின்றன. இதனால் பேருந்து நிலையத்தில் நடந்து செல்லும் பாதசாரிகளின் மீது மாநகர மற்றும் அரசு பேருந்து மோதுவதால் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பயணிகளை இறக்கிவிடுவதற்காக, மாநகர பேருந்து ஒன்று வேகமாக நுழைந்துள்ளது. இந்நிலையில், அங்கு நடந்து சென்ற மூதாட்டிமீது அப்பேருந்து வேகமாக மோதியது. இதில், படுகாயம் அடைந்து அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக பயணிகள் அவரை மீட்டு, பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.