பூந்தமல்லி: பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் கீழே, அப்பகுதியினை சேர்ந்தவர்கள் அதிகளவில் குப்பைகளை கொட்டி வந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை குவிந்து கிடந்த அக்குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால், ட்ரான்ஸ்பார்மர் மீது தீ பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் டிரான்ஸ்பார்மர் கீழ் பற்றி எரிந்த தீயை, தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது.
பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலுள்ள பெரும்பாலான ட்ரான்ஸ்பார்மர் கீழ் பகுதியில் அதிகளவில் குப்பைகள் சேர்ந்துள்ளதால், அதனை அகற்ற வேண்டும். கோடைகாலத்தில் இது போன்ற தீ விபத்துகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதால், பெரும் விபத்து ஏற்படுவதற்குள், சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.