திருவனந்தபுரம்: பாதுகாப்பு மிகுந்த சபரிமலை பொன்னம்பலமேட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் தடையை மீறி சென்று பூஜை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து சிறிது தொலைவிலுள்ள மலையில் பொன்னம்பலமேடு உள்ளது. இங்குதான் மகரவிளக்கு பூஜை தினத்தன்று மகரஜோதி ஏற்றப்படும். கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. இந்த பொன்னம்பல மேட்டில் தடையை மீறி தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் பூஜை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்துபுகாரின் பேரில் சென்னையை சேர்ந்த நாராயணசாமி என்பவர் தலைமையில் 5 பேர் கடந்த வாரம் பூஜை நடத்தியது தெரியவந்துள்ளது. நாராயணசுவாமி உட்பட 5 பேர் மீது வனத்துறை 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுவரை சிறை தண்டனை கிடைக்கும். நாராயணசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சபரிமலை ஐயப்பன் கோயில் கீழ் சாந்தியின் உதவியாளராக பணி புரிந்துள்ளார். அப்போது சபரிமலையில் பூஜை செய்ய வருபவர்களிடம் போலி ரசீது கொடுத்து மோசடி செய்ததாக இவர் மிது புகார் கூறப்பட்டது.