புதுடெல்லி: தமிழ்நாடு கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொன்.மாணிக்கவேல் பணியாற்றிய போது சர்வதேச சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் என்பவரை கைது செய்தார். இதையடுத்து அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவள்ளூர் டி.எஸ்.பியாக பணிபுரிந்த காதர் பாட்ஷா மற்றும் கோயம்பேடு சிறப்பு துணை ஆய்வாளராக இருந்த சுப்புராஜ் மீது பொன்.மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்தார். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த நிலையில் சிலை கடத்தல் தொடர்பான விவகாரத்தில் பொன்.மாணிக்கவேலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ தொடர்ந்திருந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் பொன்.மாணிக்கவேலின் ஜாமீனை ரத்துச் செய்ய வேண்டும். அதேப்போன்று அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.
குறிப்பாக அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக பேட்டி அளிக்கும் போது சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விவரங்கள் குறித்து தெரிவித்து வருகிறார். மேலும் சிபிஐக்கு எதிராகவும் பேசி வருகிறார். இது விசாரணையை பாதிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. மேலும் இந்த விவகாரத்தில் பொன்.மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்கியபோது அவருக்கு பாஸ்போர்ட் ஒப்படைக்கப்படுவதற்கான எந்த நிபந்தனையும் இல்லாததால், அவர் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க மறுத்து வருகிறார். எனவே அதுகுறித்தும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார். இதேப்போன்று இந்த வழக்கின் பிரதான மனுதாரரன காதர் பாஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொன்.மாணிக்கவேலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விவகாரத்தில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ தொடர்ந்த வழக்கில் பொன்.மாணிக்கவேல் நான்கு வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது. அதேநேரத்தில் பொன்.மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். மேலும் சிலை கடத்தல் விவகாரம், சி.பி.ஐ விசாரணை உள்ளிட்டவை தொடர்பாக பத்திரிகை, ஊடகங்கள், சமூக வலைதளங்கள், சமூக ஊடகங்கள் என எதர்க்கும் பேட்டி அளிக்க கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.