கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், திமுக நகர மன்ற தலைவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று மாலை நடந்தது. இதில், நகராட்சி ஆணையர் ராணி தலைமை தாங்கினார். நகர மன்ற துணை தலைவர் லோகநாதன், பொறியாளர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் நாகராஜ், ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திமுக நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் 100க்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், வார்டு கவுன்சிலர்கள் ரவி, ஸ்ரீமதிராஜி, சதீஷ்குமார், டில்லி, நக்கீரன், ஜெயந்திஜெகன், குமரவேல், சசிகலா செந்தில், திவ்யா சந்தோஷ்குமார், கௌசல்யா பிரகாஷ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.