மதுரை: மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் தீவிரவாதியை விட மோசமானவர்கள் என்று மதுரையில் துரை வைகோ எம்பி தெரிவித்தார்.
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
நடிகர் விஜய் பெரிய நட்சத்திரம். ஊடகவியலாளர்களை அவர் சந்திக்க வேண்டும். அதை வைத்து தான் அவருடைய அரசியல் எதிர்காலம் இருக்கிறது.மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள், தீவிரவாதிகளை விடவும் மோசமானவர்கள். மதவாத சக்திகள் வேர் ஊன்ற விடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் வலுவான கூட்டணி வைத்து இருக்கிறோம்.
நூற்றுக்கணக்கான கோடிகளை சமஸ்கிருதத்திற்கு ஒன்றிய அரசு செலவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு எனக்குத் தெரிந்தே சமஸ்கிருதத்திற்கு ₹600 கோடி செலவிட்டுள்ளது. இந்த சமஸ்கிருத மொழி வெறும் 20 ஆயிரம் பேருக்குத்தான் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே 8 கோடி தமிழர்கள் இருக்கின்றனர். உலகம் முழுவதும் ஏராளமான தமிழர்கள் உள்ள தமிழ் மொழிக்கு ஒன்றிய அரசு வெறும் ₹20 கோடி தான் செலவு செய்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.