சென்னை: அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டு போவீர்கள் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாக பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய நிதிநிலை அறிக்கை உங்கள் ஆட்சியை காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டை காப்பாற்றாது. அரசை பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களை பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டு போவீர்கள் என அறிவுறுத்த கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால் தனிமைப்பட்டு போவீர்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
109