டெல்லி: கடந்த 2023-2024ம் நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு வரப்பெற்ற நன்கொடையில் 88 சதவீதத்தை கார்போரேட் நிறுவனங்கள் அளித்துள்ளன. அவற்றில் பெரும்பாலான தொகை பாஜகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 20ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெறப்படும் நன்கொடைகளை தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும். இதன்படி 2023-2024 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி மொத்தமாக பெறபட்ட நன்கொடை ரூ.2,544 கோடியில் ரூ.2,243 கோடியை ஆளும் பாஜக பெற்றுள்ளது. முந்தைய நிதியாண்டில் 719 கோடியாக இருந்தது.
இது தற்போது 2011 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதே போல் 2022ல் ரூ.79 கோடியே 90 லட்சமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் நன்கொடை அளவு கடந்த நிதியாண்டில் ரூ.252 விழுக்காடு அதிகரித்து ரூ.281 கோடியே 40 லட்சமாக உயர்ந்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வரப்பெற்ற நன்கொடையில் 88 விழுக்காடு கார்போரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டவையாகும். அதிகபட்சமாக டெல்லியை சேர்ந்த பாரதி என்டர்பிரைசஸ் அறக்கட்டளை ரூ.880 கோடி நன்கொடை அளித்துள்ளது. இதை 82 விழுக்காடு தொகையை அந்நிறுவனம் பாஜகவுக்கும் 17 விழுக்காட்டை காங்கிரசுக்கும் அளித்துள்ளது. டிஎல்எஃப், ஆர்செலார் மிட்டல் நிப்பான் ஸ்டீல் தலா ரூ.100 கோடியும், மாதா ப்ராஜக்ட்ஸ் ரூ.75 கோடியையும் நன்கொடையாக அளித்துள்ளன.
கௌகாத்தி தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி ஒப்பந்தத்தை பெற்றுள்ள அகமதாபாத்தை சேர்ந்த கட்டுமான நிறுவனமான டிஆர்ஏ ரூ.50 கோடி நன்கொடையை பாஜகவுக்கு மட்டுமே அளித்துள்ளது. மற்றொரு அகமதாபாத் நிறுவனமான இண்டாஸ் பார்மா ரூ.25 கோடியை பாஜகவுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. இந்த 2 குஜராத் நிறுவனங்களும் 2022-2023 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது. நன்கொடை அளித்ததில் மராட்டிய மாநிலம் 3வது இடத்தில உள்ளது. அந்த மாநிலத்தை சேர்ந்த நிறுவனங்கள் ரூ.53 கோடியை நன்கொடையாக அளித்துள்ளன. இந்த நன்கொடைகள் அனைத்தும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய நிதியாண்டில் அளிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.