சென்னை: அமைச்சர் உதயநிதியின் வார்த்தைகளை திரித்து கூறி அரசியல் ஆதாயத்திற்காக வன்முறை, அச்சுறுத்தல்கள் அளிப்பது சரியில்லை என்று நடிகரும், மக்கள் நிதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எச்சரித்துள்ளார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியிருப்பதை இன படுகொலைக்கு தூண்டியதாக பாஜகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், உதயநிதியின் கருத்துக்கு திரை உலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் சனாதனத்தை பற்றி கருத்து கூற உதயநிதிக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். உதயநிதி கருத்துடன் உடன்பட வில்லை எனில் அவருடன் விவாதத்தில் ஈடுபடலாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அவரது வார்த்தைகளை திரித்து கூறி குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக வன்முறை, அச்சுறுத்தல்கள் விடுப்பது சரியானது அல்ல என்றும் கமல்ஹாசன் எச்சரித்துள்ளார். ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது என்றும், இந்த சூழல் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார். உள்ளடக்கம், சமத்துவம் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்து நமது மரபுகளை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வது முக்கியம் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.