வேதாரண்யம்: நாகை மாவட்ட மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 16 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம், செருதூர், அக்கரப்பேட்டை, ஆலுகாட்டு துறையைசேர்ந்த 23 மீனவர்கள் 4 பைபர் படகில் நேற்று முன்தினம் கோடியக்கரை தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டு இருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் வழிமறித்து கத்தி, இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கி உள்ளனர்.
பின்பு மீனவர்களின் படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன், வாக்கிடாக்கி, வலை, இஞ்சின் உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த 19 மீனவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக மீனவர்களை ஆயுதம் கொண்டு மிரட்டி தாக்கி விட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்ற இலங்கையை சேர்ந்த அடையாளம் தெரியாத கடற்கொள்ளையர்கள் 16 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.