சென்னை: காவலர்கள் குறைதீர் முகாமில் போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 90 போலீசாரிடம் புகார் மனுக்கள் பெற்றார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் காவலர்களுக்கான குறைதீர் முகாம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த காவலர்கள் குறைதீர் சிறப்பு முகாமில் போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டு, பெருநகர காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை, சிறப்பு பிரிவுகளின் பணியாற்றும் போலீசாரிடம் மனுக்களை பெற்றார்.
அந்த வகையில், 4 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்ஐக்கள் உட்பட 90 போலீசாரிடம் கமிஷனர் அருண் நேரடியாக மனுக்கள் பெற்றார். காவலர்கள் அளித்த புகார் மனுக்களில் பெரும்பாலானவை பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த சிறப்பு முகாமில் தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரட்கர், நிர்வாக பிரிவு துணை கமிஷனர் சுப்புலட்சுமி, காவலர் நலன் துணை கமிஷனர் மேகலினா ஐடன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.