மும்பை: போதை பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோரை கைது செய்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோரை போதை பொருள் வழக்கில் போதை பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மூத்த போலீஸ் அதிகாரி விஷ்வ விஜய் சிங் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர். 22 நாட்கள் சிறையில் இருந்த ஆர்யன் கானை கைது செய்த விவகாரத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, கடந்தாண்டு மே மாதம் போதை பொருள் கட்டுப்பாட்டு முகமை விடுவித்தது.
அதேநேரம் மேற்கண்ட வழக்கில், அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாக புகார் எழுந்தது. அதனால் போதைப் பொருள் கட்டுப்பாட்டு முகமையில் பணியாற்றிய மூத்த அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 7 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் மற்றொரு முறைகேடு வழக்கில் போலீஸ் கண்காணிப்பாளர் விஷ்வ விஜய் சிங் மீது போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமை வழக்குபதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில் தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். விஷ்வ விஜய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் மும்பை காவல்துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.