பண்ருட்டி: பண்ருட்டி அருகே யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் எஸ்ஐ வேல்முருகன் தலைமையிலான போலீசார் காடாம்புலியூர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை சோதனை செய்ததில் அவர்களிடம் துப்பாக்கி, கத்தி இருப்பது தெரிந்தது.
விசாரணையில், அவர்கள் புறங்கணி கிழக்கு தெருவை சேர்ந்த உத்திரவேல் மகன் மணிகண்டன் (25). வேலன்குப்பம் தெற்குதெரு ராஜேந்திரன் மகன் விக்ரம் (25), பழைய பிள்ளையார்குப்பம், மாரியம்மன் கோயில் தெரு சந்தானபிரபு (32) என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் காட்டுப்பன்றி, முயல், எலி, அணில்களை வேட்டையாட யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 பிளாஸ்டிக் துப்பாக்கிகள், கத்தி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.