சென்னை : சென்னை பெருநகர காவல் துறையின் வேண்டுகோளின்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கிய உத்தரவின்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CMDA) வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்படி (VCVT) உள்துறை ஒதுக்கீடு மூலம் சென்னை பெருநகர காவல்துறை மேம்பாட்டிற்காக தேவையான வசதிகளை வழங்கிட 05.06.2025 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி,
வடசென்னை பகுதியில் 45 இடங்களில் ANPR கேமராக்கள் நிறுவிட ரூ.9.16 கோடியும்,
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல் ரோந்து பணிக்காக 60 புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள் வாங்கிட ரூ.90.6 இலட்சமும்,
குடிசைவாழ் பகுதிகளில் இளைஞர்களின் கல்வி திறன் மற்றும் விளையாட்டு திறன் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் 10 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் அமைத்திட ரூ.60 இலட்சமும்,
போதை பொருட்கள் நுகர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்விற்காக மறுவாழ்வு மையங்கள் அமைத்திட ரூ.2.95 கோடியும்,
பணியின் நிமித்தமாக வந்து செல்லும் காவல் துறையினர் தங்கிச்செல்வதற்காக காவலர் தங்கும் விடுதிகள் அமைத்திட ரூ.9.75 கோடியும்,
V-6 கொளத்தூர் காவல் நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.16 கோடியும்,
K-5 பெரவள்ளுர் காவல் நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.15 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு,
ஆக மொத்தம் 7 காவல் துறை பயன்பாட்டுக்குரிய திட்டங்களுக்கு ரூ.54.366 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் சென்னை பெருநகரில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும், வட சென்னை பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைவர்.
மேலும் காவல் துறையினருக்கு உதவியாக போக்குவரத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரித்தல், குற்றத்தடுப்பிற்காக நவீன வசதிகள் மூலம் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், வணிக நிறுவனங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கண்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.