சென்னை: ‘கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக விஜய் விரிக்கும் மாய வலையில் அரசியல் கட்சிகள் சிக்காது’ என்று திமுக மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பேசினார்.தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் குத்துக்கல்வலசையில் கலைஞர் பிறந்தநாள் விழா, நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பேசியதாவது: 2021ம் ஆண்டு தேர்தல் சீமான், விஜயகாந்த், பிரியா என பல நடிகர்களை காலி செய்த தேர்தலாகும். ஒரு நடிகரும் வெற்றி பெறவில்லை. தேமுதிக வராததால் திமுக தேய்ந்து போய்விட்டதா? தற்போது விஜய் புதிதாக வந்திருக்கிறார். கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுப்பாராம்.
அவரிடம் இல்லாததை எப்படி தருவார். அவர் விரிக்கும் மாய வலையில் அரசியல் கட்சிகள் சிக்காது. சீமான் இளைஞர்களுக்கு எப்படி நேர்வழி காட்டுவார்.
சமீபத்தில் நடந்த 13 தொகுதி இடைத்தேர்தலில் பாஜ 11 இடங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. 2 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இந்தியா கூட்டணி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தை சுயேட்சை வென்றுள்ளார். அண்ணாவை பற்றி பேசினால் கூட்டணி கிடையாது என்று சொல்லுவதற்கு அதிமுகவுக்கு தைரியம் இல்லை. ஆங்கிலத்தில் பேசியவர்கள் வெட்கப்படுவார்கள் என்கிறார் அமித்ஷா. ஆனால் ஒன்றிய அமைச்சர்களின் குடும்பத்தினர் ஆங்கிலத்தில் தான் கல்வி பயின்றனர். தமிழகத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.