Monday, July 14, 2025
Home செய்திகள்Showinpage தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு பிரதமர் மோடி 8 நாட்கள் மெகா வெளிநாடு பயணம்: ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டிலும் பங்கேற்பு

தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு பிரதமர் மோடி 8 நாட்கள் மெகா வெளிநாடு பயணம்: ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டிலும் பங்கேற்பு

by Neethimaan

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது கடந்த பத்தாண்டு கால ஆட்சியில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு புதிய பரிமாணத்தை அளிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, ‘குளோபல் சவுத்’ எனப்படும் வளரும் நாடுகளின் குரலாக இந்தியா திகழ வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். சமீபத்தில் இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட ஜி-20 மாநாட்டின் போது, ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராகச் சேர்த்தது இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை நிலைநிறுத்தும் வகையிலும், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வளரும் நாடுகளின் பிரச்னைகளை முன்வைத்தும் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றன.

இந்தச் சூழலில், பிரதமர் மோடி இன்று முதல் 8 நாட்கள் (வரும் 9ம் தேதி வரை) அரசு முறை சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய இந்தப் பயணம், ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்தும் முக்கிய நோக்கம் கொண்டது. பயணத்தின் முக்கிய அம்சமாக, பிரேசிலில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அங்கு, உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற முக்கிய பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் எடுத்துரைப்பார். மேலும், அர்ஜென்டினா, நமீபியா போன்ற நாடுகளுடன் பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்.

பிரதமரின் பத்தாண்டு கால ஆட்சியில் மிக நீண்ட வெளிநாட்டுப் பயணமாக இது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இன்று டெல்லியில் இருந்து கானா புறப்பட்ட பிரதமர் மோடி, கானா அதிபர் ஜான் டிரமணி மஹாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவார். தொடர்ந்து நாளை டிரினிடாட், டொபாகோ நாடுகளுக்கு செல்கிறார். அர்ஜென்டினாவில் 4, 5ம் தேதியில் இருக்கும் மோடி, அந்நாட்டு அதிபர் ஜாவியர் மிலாயுடன் சந்திப்பு நடத்துகிறார். இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து ஆலோசனை நடத்துவார். தொடர்ந்து 6, 7ம் தேதியில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா சில்வாவிடம் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாற்றுவார்.

அதன்பின் நமீபியா செல்லும் மோடி, அந்நாட்டு அதிபருடன் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார். அதன்பின் 9ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு டெல்லி திரும்ப உள்ளதாக வெளியுறவு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi