புதுடெல்லி: பிரதமர் மோடியின் பிறந்த நாள் வருகிற 17ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், ஒன்றிய சுகாதார அமைச்சகமானது, ஆயுஷ்மான் பவ என்ற திட்டத்தினை தொடங்க திட்டமிட்டு இருந்தது. இதன்படி, மாநிலம் சார்பில் நடத்த கூடிய சுகாதார திட்டங்கள் அனைத்தும், பயனாளர்களுக்கு சென்றடைவது உறுதி செய்யப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் மேளாக்கள் நடத்தப்படும். இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ‘பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நாங்கள் ஆயுஷ்மான் பவ திட்டத்தினை செயல்படுத்த இருக்கிறோம்.
இதன் வழியே, அனைத்து மாநில சுகாதார திட்டங்களும் சரியாக, கடைக்கோடியில் உள்ள ஒவ்வொரு தேவையான பயனாளருக்கும் சென்றடைவது உறுதி செய்யப்படும். இந்த திட்டத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டு, 60 ஆயிரம் பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்படும். வருகிற காலங்களில் அடிக்கடி இந்த திட்டம் நடத்தப்பட்டு, சுகாதார சேவைகள் மற்றும் திட்டங்கள் அளிக்கப்படும்’ என்று அவர் கூறியுள்ளார்.