Wednesday, June 18, 2025
Home செய்திகள்அரசியல் பாமக நெருக்கடியான சூழலில் இருக்கிறது என்ன சொல்றதுனே தெரியல… மன உளைச்சலில் இருக்கேன்: ஜி.கே.மணி வேதனை

பாமக நெருக்கடியான சூழலில் இருக்கிறது என்ன சொல்றதுனே தெரியல… மன உளைச்சலில் இருக்கேன்: ஜி.கே.மணி வேதனை

by Arun Kumar

பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்க தைலாபுரம் தோட்டத்துக்கு நேற்று வந்த பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணியை சூழ்ந்து கொண்டு செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது: என்ன சொல்றதுன்னே எனக்கு புரியல. ரொம்ப மனஉளைச்சலிலும், ஒரு நெருக்கடியான சூழலிலும் இருக்கிறோம். பாமக ஒரு பலமான கட்சி. தனித்தன்மையுடன் இருக்கிற கட்சி.

கொள்கையோடும், லட்சியத்தோடும் இருக்கக் கூடிய கட்சி. ஒரு நெருக்கடியான சூழ்நிலை உருவாகி இருப்பதை நினைத்து ரொம்ப வேதனைப்படுகிறோம், கஷ்டப்படுகிறோம். நான் எதுவும் சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன். நீங்கள் திரும்ப திரும்ப கேள்வி கேட்கிறீர்கள். நீங்கள் சொல்லி ஆகவேண்டும் என்பதால் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இல்லாட்டின்னா எம்பாட்டுக்கு நான் ஓடிபோய் இருப்பேன். ஓடினாலும், சொல்லாமல் ஓடுகிறார் என்று அதை ஒரு பெரிய செய்தியாக போடும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும் என்பதால்தான் சந்திக்கிறேன்.

தற்போது கட்சி ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறது. நெருக்கடியை பார்த்தா மனசு ரொம்ப கஷ்டமாகவும், ரொம்ப வேதனையாகவும் இருக்கு. இது மறுபடியும் சீராகணும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு. பழைய நிலையில் பாச உணர்வுள்ள கட்சியாக, வலிமையான கட்சியாக, பலமான கட்சியாக மீண்டு வரணும். ஒரு பெரிய மாநாட்டை சந்தித்த கட்சி, தேர்தலை சந்திக்கப்போற நேரத்தில் மிக வலிமையாக இருக்கணும்.

அதற்காக தீவிரமாக முயற்சி செய்கிறோம். அது சம்பந்தமாக ராமதாசை சந்தித்து பேசத்தான் வந்திருக்கிறோம். நீங்கள் நிறைய கேள்வி கேட்கிறீர்கள். ஆனால், எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாத சூழ்நிலையில்தான் நான் இருக்கிறேன். நிறைய கேள்விகள் புரிகிறது. மனசுக்கு கஷ்டமாக இருக்கு. என் வாயால் எதுவும் பேசக்கூடாது, சொல்லக்கூடாது. அது நல்லதாகவும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

* அன்புமணி கூட்டத்தில் கலந்து கொள்வேன்: பாமக எம்எல்ஏ சதாசிவம்

சேலத்தில் மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் அளித்த பேட்டியில் ‘‘அருள் எம்எல்ஏ ராஜினாமா செய்வதாக, தற்போது தகவல் கிடைத்தது. இது அவரது சுய விருப்பம். இந்த ராஜினாமாவை ராமதாஸ் ஏற்றுக் கொள்வாரா, இல்லையா என தெரியவில்லை. அதேசமயம் அன்புமணி கூட்டியுள்ள கூட்டத்தில், இன்று நான் கலந்துகொள்ள உள்ளேன்,’ என்றார். பாமகவில் அடுத்தடுத்து பரபரப்பு நிலவி வரும் நிலையில், சேலத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ நிறுவனர் ராமதாஸை சந்தித்துள்ளார். மற்றொரு எம்எல்ஏ அன்புமணியின் கூட்டத்தில் கலந்துகொள்வேன் என அறிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* ராமதாஸ் உயிருக்கு ஆபத்து: காடுவெட்டி குருவின் உறவினர் அதிர்ச்சி

பாமக நிறுவனத் தலைவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு அதிகரித்துள்ள நிலையில், வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் வன்னியர் சங்க நிறுவனருமான வி.ஜி.கே.மணிகண்டன் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வழுவூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாமகவை வழிநடத்தும் பக்குவமும், தலைமைப்பண்பும் அக்கட்சியை உருவாக்கிய ராமதாசுக்கு மட்டுமே உள்ளது. 40 ஆண்டுகளாக கிராமம் கிராமமாக சென்று கட்சியை வளர்த்த தலைவர் ராமதாஸ்.

குறுகிய காலத்தில் அன்புமணி பாமகவை கைப்பற்ற முயல்கிறார். வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குரு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது, அவர் வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தடுத்து அவரை மருத்துவக்கொலை செய்தவர் அன்புமணி என்பது நிதர்சனமான உண்மை. இதனை மருத்துவர் ராமதாசே விரைவில் ஒப்புக்கொள்வார்.

அன்புமணியின் பின்னால் செல்பவர்களுக்கே எதிர்காலத்தில் அரசியல் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதால்தான் பலர் அவர் பின்னால் செல்கின்றனர். எனக்கு பாமகவை பிடிக்காது. இருந்தாலும் நான் ராமதாசை ஆதரிக்கிறேன். ஏனென்றால் அன்புமணிக்கு உழைக்கத் தெரியாது. ராமதாசின் உயிருக்கு அன்புமணி அல்லது அன்புமணியின் மனைவியால் ஆபத்து உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* பாமக பிரச்னையின் பின்னணியில் பாஜ?: நயினார் பரபரப்பு ேபட்டி

பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: ராமதாஸ் – அன்புமணி இடையே நடந்து வரும் பிரச்னையில் பாஜ பின்னணியில் இருப்பதாக கூறுவது முற்றிலும் வேடிக்கையானது. பாமகவில் நடந்து வரும் பிரச்னையின் பின்னணில் பாஜ இல்லை. அது முழுக்க முழுக்க அவர்களது உட்கட்சி விவகாரம். அதுகுறித்து கருத்து கூற, உட்கட்சி பிரச்னையில் தலையிட எதுவும் இல்லை.

ஒரு மனிதனுக்கு தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய் மொழி மீதும் பற்று இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பேச்சுக்களில் தலைவராக இருப்பவர்கள் கருத்துகளை தவிர்க்க வேண்டும். கன்னடத்தை பூர்வீகமாக கொண்ட தலைவரால் எனக்கு பிரச்னை வந்தது எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார். அதிமுக ராஜ்யசபா எம்பி வேட்பாளர்கள் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

* ராமதாஸ்- அன்புமணி மோதல் வீட்டுடன் இருந்திருக்க வேண்டும்: எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி

புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன்மூர்த்தி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழில் இருந்து தான் கன்னட மொழி பிறந்தது என கமல்ஹாசன் கூறியதை வரவேற்கிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி கருத்து மோதல் வீட்டுடன் இருந்திருக்க வேண்டும். தெருவுக்கு வந்திருப்பது ஆரோக்கியமானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi