Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருந்தால் நானே அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தி இருப்பேன் : பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் :இன்னும் ஓரிரு ஆண்டுகள் கட்சிக்கு தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? என ராமதாஸ் உருக்கமாக கேள்வி எழுப்பி உள்ளார். ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் முற்றியுள்ள நிலையில், தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "எனக்கும் செயல் தலைவருக்கும் போய்க் கொண்டிருக்கும் பிரச்சனை உங்களுக்கு யாருக்கும் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து நடத்திய சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது. சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இருவர் யார் என்பது உங்களுக்கு தெரியும். என்னை தேடி வந்த 14 பஞ்சாயத்துகாரர்களும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள்.எல்லாம் தனக்கே வேண்டும் என்று அன்புமணி சொல்கிறார். என்னை தைலாபுரம் வீட்டுக்குள் இருந்து பேரன், பேத்திகளோடு விளையாடிக்கொண்டு இருக்குமாறு சொல்கின்றனர்.

தலைவர் பதவியை தான் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தும் அன்புமணி நம்பவில்லை. அதன் பின்பு என்னோடு இருந்த கோபம் வெளிப்பட்டது; நீயா? நானா? என பார்த்துவிடுவோம் என முடிவு செய்துவிட்டேன். 46 ஆண்டுகள் கட்சியை கட்டிக்காத்த எனக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் கட்சியின் தலைமையேற்க எனக்கு உரிமை இல்லையா?. என்னை சந்திக்கக் கூடாது என ஒவ்வொரு நிர்வாகிக்கும் அன்புமணி தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார். மாவட்ட நிர்வாகிகளை அழைத்து என்னை சந்திக்க வேண்டாம் என்று அன்புமணி கூறினார்.ஒவ்வொரு செங்கலாக பார்த்து கட்டி எழுப்பிய பாமக என்ற மாளிகையில் நான் யாரை குடியமர்த்தினேனோ அவரே வெளியே தள்ளிவிட்டார்.

அன்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும். ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருந்தால் நானே அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன். தந்தைக்கு பிறகே தனயன்; அய்யாவுக்கு பிறகே அன்புமணி என்பதே எல்லோரும் சொல்லும் வார்த்தை. குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம்; ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது; இதுவே நீதி, நேர்மை, தர்மம். குலசாமி என்று கூறிக்கொண்டே நெஞ்சில் என்னை குத்துகின்றனர். எல்லாம் அய்யாதான் என்று |சொல்லிக்கொண்டே அதல பாதாளத்தில் தள்ள பார்க்கிறார்கள். அய்யாவின் புகழ், பெருமையை பேசுவதே எங்கள் நோக்கம் என்று சொல்லிக்கொண்டே சிறுமைப்படுத்துகின்றனர். உயிருள்ள என்னை எல்லா வகையிலும் உதாசீனப்படுத்தி, என் உருவப்படத்தை மட்டும் உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபிணமாக்கி நாடு முழுவதும் என் பெயரில் நடைபயணம் செல்கின்றனர்,"இவ்வாறு தெரிவித்தார்.