சென்னை: நாளை நெல்லை – எழும்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் காணொலியில் தொடங்கி வைக்கிறார். நெல்லை – சென்னை இடையே இயக்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயில் நெல்லை முதல் சென்னை எழும்பூர் வரை 653 கி.மீ இயக்கப்படும். சென்னை – நெல்லை இடையே 24ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள நிலையில், வந்தே பாரத் ரயில் வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும் வகையிலும், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடையும் வகையிலும் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூர் – நெல்லை இடையே தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளது.
இதேபோல் நெல்லை – சென்னை இடையே இயக்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயிலில் இரண்டு வகையான கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு தொடங்கியது. சாதாரண ஏசி சேர்க்கார் இருக்கைக்கு ரூ.1610, முதல் வகுப்பு ஏசி சேர் காருக்கு ரூ.3005 கட்டணமாக நிர்ணயம் செய்யபட்டுள்ளது. சாதாரண ஏசி வகுப்பில் உணவு கட்டணம் ரூ.308, முதல் வகுப்பு ஏசி பெட்டியில் உணவு கட்டணம் ரூ. 369 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் தொடங்கி வைக்க இருக்கிறார்.