Tuesday, May 20, 2025
Home செய்திகள்குற்றம் கோயில் விழாவில் நடனமாடியபோது தகராறு பிளஸ் 2 மாணவன் குத்தி கொலை: மேலும் இருவர் காயம்; 4 பேர் கைது

கோயில் விழாவில் நடனமாடியபோது தகராறு பிளஸ் 2 மாணவன் குத்தி கொலை: மேலும் இருவர் காயம்; 4 பேர் கைது

by Francis

குளித்தலை: கோயில் திருவிழாவில் நடனமாடிய போது ஏற்பட்ட தகராறில் பிளஸ்2 மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கரூர் அருகே குளித்தலை கொல்லம்பட்டறை தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ஷியாம் சுந்தர்(17). பிளஸ்2 தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில் குளித்தலை மகாமாரியம்மன் கோயில் திருவிழா 5ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு பூச்சொரிதல் நடைபெற்றது. கொல்லம்பட்டறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாரியம்மனுக்கு பூக்களை எடுத்துக்கொண்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர். அப்போது இரவு 11.30 மணி அளவில் பேரளாம்மன் கோயில் தெருவில் வந்தபோது ஷியாம்சுந்தர் உள்ளிட்ட சிறுவர்கள் நடனமாடி கொண்டிருந்தனர். அருகே நடனமாடியபடி வந்த குளித்தலை பெரியபாலத்தை சேர்ந்த நாகேந்திரன் மற்றும் சிலர், ஷியாம்சுந்தர் மீது விழுந்தனர்.

இதனால் கோபமடைந்த அவர், சற்று தள்ளி நடனமாடும்படி கூறியுள்ளார். இதனால் நாகேந்திரன், ஷியார்சுந்தர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நாகேந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷியாம் சுந்தரை சரமாரி குத்தியுள்ளார். படுகாயமடைந்த ஷியார்சுந்தர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க வந்த குளித்தலையை சேர்ந்த தாமோதரன்(25), வசந்தகுமார் (23) ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்ததால் திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த கரூர் எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா மற்றும் குளித்தலை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த தாமோதரனை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். லேசான காயமடைந்த வசந்தகுமார் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து குளித்தலை மீன்காரதெருவை சேர்ந்த நாகேந்திரன் (25), மலையப்பநகர் பகுதியை சேர்ந்த யோகேஷ் (21), சண்முகாநகரை சேர்ந்த ராம்குமார் (21), முஸ்தபா (19) ஆகிய 4பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான மோகன் (25) என்பவரை தேடி வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi